Thursday 28 June 2012

முகவுரை


சித்தியியல்

 “ஆதிசிவ சத்தியிட முதலேகாப்பு
அண்டரண்டந் தான்புகழுங் கடவுள்காப்பு
பாதிமதி சடையணிந்த முடியோன்காப்பு
பாருலகில் சித்தியுறும் பாலன்காப்பு
சோதியெனு நந்தீசர் முதலேகாப்பு
சுடரொளியாஞ் சூட்சாதி சுமுகன்காப்பு
நீதியெனும் மாதேவி நிறையோன் காப்பு
நீடாழி வுலகுபதி காப்புபாரே


சிரம் தாழ்ந்து குருமார்களை வணங்கி இந்த தமிழ் சித்தியியலின் முதற் பாகத்தை துவங்குகிறேன். மிக ஆணித்திரமாக யோக மார்க்கத்தின் சூட்சும விஷயங்களை கற்பித்ததுடன் மட்டுமின்றி பொறுமையின் எல்லைவரை கைப்பிடித்து நடத்திச்சென்று, அப்பொறுமையே ஞானத்தின் நுழைவு வாயில் என்று உணர்த்திய குருநாதர் அவர்களின் பாதங்களை வணங்குகிறேன்.

இப்பிரபஞ்சத்தில், இந்த பிறவியிலேயே என்னை நானே உணர்ந்துக் கொள்வதற்கும், என்னை சுற்றி நடப்பவைகளை அறிந்து கொள்வதற்கும், பிரம்ம வித்தை என்று சொல்லப்பட்டு வரும் யோக அப்பியாசம் மூலமாக தன்னுணர்வுடன் இந்த பிறவியிலேயே சமாதிநிலை அடையும் நிலையை பல கோடி ஆண்டுகளாய் பாதுகாத்து வரும் யோகிகள் மட்டுமே அறிந்த வித்தையை எனக்கு உணர்த்திய ஞான பிதாவை இக்கணத்தில் அவர் பாதங்களை முழுமையாக வணங்கிச்சரணடைகிறேன்.

பல ஆண்டுகளாய் தவம் இயற்றும் குருமார்கள் சொல்லி புரிய வைக்க முடியாததை நான் சொல்கிறேன் என்று சொன்னால் அது அதிகபிரசங்கிதனமாகி விடும். வேதரிஷிகள் உணர்த்திய சர்வ வல்லமை பொறுந்திய பிரபஞ்சவெளி முழுக்க நிறைந்த ஆற்றலால் பஞ்சபூதங்களுடன் இணைந்து மனித மனத்துடன் விளக்க முயற்ச்சிக்கும் போது தடைகளும் உடல் உபாதைகளும் வந்து விடுகின்றன. தவரிஷிகள் நம்முடன் கலந்து இந்த பிரபஞ்சத்தை தன்னுள் அடக்கி இந்த மண்ணில் விளைந்த உடம்பை பெரும் ஆற்றல்மிக்க பிரபஞ்சத்துடன் இணைத்துக் கொண்டிருப்பதால் இயற்கை ரகஸியங்களை வெளிப்படுத்த முயலும் போது இத்தகைய சூட்சும செயல்களால் ஒடுக்கவே முயற்ச்சிக்கிறார்கள்.

சிறிய அறிதலின் பயணமே தினம் தினம் தீ கனலை எழுப்பி உள்ளொளியை பெரும் தீயாக வளர்த்து அன்றாடம் நடக்கும் செயல்களையே பிரபஞ்சம் அளவிற்கு வளர்த்தெடுக்க வேண்டி வந்து விடுகிறது. தவம் இயற்ற இயற்ற உடம்பு மெல்ல இயற்கையை நோக்கி இழுக்கப்படுகிறது. பின்பு மனம் விரிக்கப்படுகிறது விரித்தெடுக்கப்பட்ட மனம் பிரபஞ்சத்துடன் இணைகிறது. சர்வ வல்லமை பொருந்திய அந்த ஆற்றல் பெருவல்லமையாகி பின்னர் பெரும் காமத்தை விளைவித்து விடுகிறது. நண்பர் அர்ச்சனாவிடம் ஒரு முறை எல்லா பெண்களுமே அழகாக தோற்றமளிக்கிறார்கள் என்று சொன்ன போது அவர் நீ வேறு எங்கோ இருக்கிறாய் என்று கிண்டல் செய்தார். இந்த பெரும் ஆற்றல்களை மனதால் அடக்கி ஆள்வதன் புற வெளிப்பாடு தான் இத்தகைய வகையான காமம் சொல்லிலும் எண்ணங்களிலும் இழையோடி வந்து விடுகிறது. யோகத்தின் ஆரம்பநிலைகளில் யோகிகளுக்குரிய மிக பெரிய தடைகல் இது.

இந்த பிறவியில் அறிந்த பெரும் ஞானத்தை ரத்தமும் சதையுமாய் உள்ள இந்த மனித உடம்பிற்குள் அறிந்த அனைத்தையும் பிரபஞ்ச அளவிற்கு கொண்டு செல்லும் போதும் மயக்கத்திற்குள் சென்று விடுகின்றன. அதை மீண்டும் மீண்டும் அணுகி சுவாசத்தையே பிரபஞ்சத்துடன் இணைத்து எல்லாம் பிரபஞ்சத்தின் அளவிற்கு விரித்தெடுக்க முயலும் போது கர்மாக்கள் கிளர்ந்தெளுந்து குடும்பசூழ்நிலைகளில் நம்மை சக்கையாக பிழிந்தெடுத்து விடுகின்றன. ஞான மரபை சரியான கோணத்தில் விளங்கிக் கொள்ள இயலாமல் தினம் தினம் மனம் அடங்கி ஒடுங்கி நிகழ்வுக்குள் கலந்து விடுகின்றன. விவரிக்க இயலாத பெரும் துன்பியல் நிகழ்வுகள் அது.

பொது சாரம்
பலர் யோக அப்பியாசத்தைப் பற்றியும் பணம் வரும் வழியையும் பற்றியுமே கேட்டு மின்னஞ்சலில் நிரப்பினார்கள். அவர்களுக்கு கீழ்க்கண்ட என் சொந்த நிகழ்ச்சியை பாடமாக வைக்கிறேன்.

மகள் பார்கவி பிறந்து இன்றுடன் ஐந்து திங்கள் ஆகிவிட்டது. கடந்த மாதம் அவளுக்கு பெயர் வைக்க வேண்டி என் மனைவி தொடர்ந்து சொல்லி சொல்வதையே நிறுத்தி விட்டார். பொருளாதார கஷ்டத்தின் காரணமாய் பேர் வைக்கும் நிகழ்ச்சி தள்ளிக்கொண்டே வந்தது. என் குருநாதரிடம் நாள் பார்க்க சொன்ன போது நீயே பேர் வைத்துக் கொள் என்று சொன்னார். உற்றார் உறவினர் வேலை பளு என்று காரணம் சொன்னார்கள். பெற்றோர் நீயே வைத்துக் கொள் என்றனர். நாட்கள் நகர்ந்து கொண்டேயிருந்தன.

ஒரு நாளில் அதிகாலையில் தவம் முடித்தப்பிறகு வீட்டிலேயே சர்க்கரை பொங்கல் செய்து குருநாதர் படம் முன்பு மகளை கிடத்தி என் மகளுக்கு பார்கவி என்று பெயர் வைத்தேன். என் மகளுக்கு ஞானத்தின் கதவை திறந்து அவளை வழிநடத்தும்மாறு தவம் இயற்றினேன். பள்ளிக்கு தயாராகிக்கொண்டிருந்த என் மகன் பகவதியை அழைத்து மகளின் பெயர் சொல்லி கூப்பிட செய்து மூவரும் சர்க்கரை பொங்கலை சாப்பிட்டு பெயர் வைக்கும் வைபவத்தை மிக எளிமையாய் நடத்திக்கொண்டோம்.

தவம் செய்வதால் வாழ்க்கையில் பொருளாதாரம் உயரும் என்று நினைப்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. உண்மையான தவம் இயற்றும் போது கர்மாக்கள் களைவதே நடக்கின்றன. கர்மாக்கள் களையும் போது அடையும் துன்பத்தால் யோகத்தை விட்டு ஓடி தடம் தெரியாமல் போனவர் பலர். ஞான மரபுக்கள் நாம் இல்லை என்று உணரும் போது மனித மனம் இயற்கையால் தண்டிக்கப்பட்டுவிடுகிறது. ஞானம் வெறுமே வாசிப்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் விவாதிப்பதற்கும் உரியவை அல்ல.

குடும்பத்தில் நான் ஒருவனே மிக குறைந்த படிப்பு படித்தவன் என்பதால் பல இடங்களில் தமிழ் நடை சரியில்லாமல் போவதும் புரிந்துக்கொள்வதற்கும் அதை பகுத்து ஆராய்ந்து அறிவதற்கும் சிரமம் இருப்பின் வாசகர்கள் தயவு கூர்ந்து பொருத்தருளுமாறு வேண்டுகிறேன்.

6 comments:

  1. வணக்கம்,
    தங்களது சித்தியியல் வலைப்பூ மேன்மேலும் வளர வாழ்த்துகின்றேன்.
    முதல் பதிவிலேயே பல விஷயங்களை (நிதர்சனமான உண்மைகளை)கூறியுள்ளீர்கள்.
    ///...ஞானம் வெறுமே வாசிப்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் விவாதிப்பதற்கும் உரியவை அல்ல....////
    மிக உன்னதமான கருத்து.

    மேலும் தொடருங்கள்......

    அன்புடன்,
    பா. முருகையன், வடலூர்.
    www.siddharkal.blogpot.in

    ReplyDelete
  2. உங்களுக்குள் மலரும் இறையாற்றலை வணங்குகிறேன் .
    பல ஆண்டுகளாய் தவம் இயற்றும் குருமார்கள் சொல்லி புரிய வைக்க முடியாததை நான் சொல்கிறேன் என்று சொன்னால் அது அதிகபிரசங்கிதனமாகி விடும
    தெரிந்ததைஎழுதும் எண்ணத்தை மனசுக்குள் விதைத்து எத்தனை நாள் சுமந்து இருந்தீர்களோ ? இப்படி எழுத உங்களை தூண்டியது உங்கள் நண்பர்கள் மூலம் அந்த இறையாற்றல்தான் என்பதை அழுத்தமாக நான் நம்புகிறேன் .எனவே இதில் அதிக அதிகபிரசங்கிதனமாகி விடும என்ற சிந்தனைக்கு இடமே இல்லை .

    பல இடங்களில் தமிழ் நடை சரியில்லாமல் போவதும் புரிந்துக்கொள்வதற்கும் அதை பகுத்து ஆராய்ந்து அறிவதற்கும் சிரமம் இருப்பின் வாசகர்கள் தயவு கூர்ந்து பொருத்தருளுமாறு வேண்டுகிறேன்.
    உங்கள் தேடலை பற்றியும் சொல்லுங்கள் .எழுத்துப்பிழை சில விசயன்களை கொட்டி தீர்க்கும்போது இயல்பு .அது குற்றம் இல்லை .நிறைய கடமை பட்டு இருக்கிறோம் .எழுதுங்கள் .
    வீட்டில் சகோதரிக்கும் ,பகவதி மற்றும் பார்கவிக்கு ஆகியோருக்கு எங்களின் விசாரிப்புகள்

    என்றென்றும் அன்புடன்
    *கிருஷ்ணமூர்த்தி*

    ReplyDelete
  3. மிக்க நன்றி

    ReplyDelete
  4. தமிழில் யோகமார்க்கத்தைப் பற்றி நானும் எழுத இயலுமா என்று பலமுறை யோசித்தே காலம் கடந்துப் போனது. சித்தர்களுடைய மருத்துவம் யோகிக்களுக்கே மற்ற பொதுவான மக்களுக்கு உரியவையல்ல என்பது தமிழ் அறிந்தவர்கள் அறியாமல் இருப்பது வேதனைக்குரிய விஷயம். சித்தருடைய வைத்தியங்கள் பொதுவான பார்வைக்குயல்ல என்பது படிக்க படிக்க விளங்கிக்கொள்ளும். விவரிக்க முடியாத பூட்டு அது.

    ReplyDelete
  5. அருமையான பதிவு...நன்றி

    ReplyDelete